சென்னை: எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் செயல்படுவேன், எதிர்க்கட்சிக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவரை உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினார். அதற்கு நன்றி தெரிவித்து பேரவைத் தலைவர் பேசியதாவது:
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு, ஒரு சரியான தலைமையைத் தேடி என் மனம் தவித்தது. மீண்டும் ஒரு எம்ஜிஆர் நமக்கு கிடைக்கமாட்டாரா என்று மனம் ஏங்கியது.
அந்த ஏக்கத்தை போக்கிய தலைவர்தான் நம் முதல்வர் விஜய். முதல்வராக பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சந்தித்தார். ஒரு புதிய கோணத்தில் அவர் காட்டியிருக்கிற அரசியல் பண்பு, எல்லோராலும் பாராட்டப்படுகிறது. முதல்வர் விஜய்யை என்னைப் போலவே தமிழக மக்களும் எம்ஜிஆராகத்தான் பார்க்கிறார்கள்.
பெரும் வைரக்கல்
சட்டப்பேரவை என்பது மக்களின் ஏகோபித்த குரல் ஒலிக்கும் உயரிய ஜனநாயக மன்றமாகும். சமூக நீதி, கல்வி வளர்ச்சி, மொழி உரிமை, மாநில முன்னேற்றம், தமிழகம் உயர்வடைய வகுக்கப்பட்ட பல திட்டங்களுக்கும், நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கும் அடிநாதமாக விளங்கியது.
நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை வரலாற்றில் இடம் பெறச் செய்தது. இந்த மாமன்றத்தை எவ்வளவு பெரிய மனிதர்கள் அலங்கரித்துள்ளனர். என் அரசியல் வாழ்வில் பெரும் வைரக் கல்லாக இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளார் முதல்வர்.
அவை மாண்பு
இந்த நாற்காலியில் அமர்ந்தபின் எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் முழு அவையின் தலைவராக செயல்படுவேன். ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் சம வாய்ப்பும், உரிமையும் வழங்கப்படும்.
நாம் அனைவரும் அவையின் மாண்பை பாதுகாப்போம்; தரமான விவாதங்களை வைப்போம். தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்போம்; மக்கள் நலச் சட்டங்களை முன்னிலைப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
திருக்குறள், பைபிள் வசனங்கள்
பேரவைத் தலைவர் பொறுப்பேற்ற ஜே.சி.டி.பிரபாகர் தனது ஏற்புரையில், திருக்குறள், பைபிள் வாசகங்களை குறிப்பிட்டு பேசினார். ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’ என்ற திருக்குறளை குறி்பிட்டு, அவையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் மக்களுக்கு பயனளிக்கும் உயரிய சொல்லாக அமைதல் வேண்டும்.
அந்த வகையில் உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். மேலும், “நான் வளர்கிறபோதே என் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டது மூன்றுதான்; ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
உனக்கு செய்யத்தக்க திராணி இருக்கிறபோது, செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே! நீ உன்னிடத்தில் அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறு என்கின்ற அந்த வாசகங்கள்தான் என் நெஞ்சத்தைவிட்டு அன்றாடம் நீங்காது இருக்கிறது” என்று பைபிள் வாசகங்களை கோடிட்டு காட்டினார்.