சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசனிடம், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்தார். உடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் இன்று (மே 12) நடைபெறுகிறது. இதில் பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில் நிரந்தர பேரவைத் தலைவர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர், பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது முதல்வர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த நிலையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால், பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாக இருக்கின்றனர்.
அதன்படி சட்டப்பேரவைத் தலைவர் இன்று தேர்வு செய்யப்பட்டதும், அவரை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பேரவைத் தலை வருக்கான இருக்கையில் அமரவைப்பார்கள்.
பின்னர், பேரவைத் தலைவரை வாழ்த்தி அனைத்துக் கட்சித் தலைவர் களும் பேசுவார்கள். இதற்கிடையே, பேரவை முன்னவராக அமைச்சர் செங்கோட்டையன், அரசு கொறடாவாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.