சென்னை: முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமியின் செயலராக இருந்த தற்போதைய சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் விருப்ப ஓய்வில் செல்கிறார்.
தமிழக அரசின் சமூக நலத்துறை செயலராக இருப்பவர் ஜெயஸ்ரீ முரளிதரன். 2002-ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற அதிகாரியான இவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர்.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அவரைத் தொடர்ந்து பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் முதல்வரின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலர் நிலை-4 பொறுப்பில் பணியாற்றினார்.
இவர் 2027-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற இருந்த நிலையில், தற்போது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அரசு அனுமதியளித்த நிலையில், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
சொந்த காரணங்களுக்காக அவர் ஓய்வில் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியராக இவர் இருந்தபோது, ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து ஜெயலலிதா தேர்வானார்.
அப்போது ஏற்பட்ட தொடர்பில், ஜெயலலிதா முதல்வரான பின்னர், செயலராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டார். தற்போது செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கான உணவுப்பட்டியல் இவர் தயாரித்து வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.