தமிழகம்

“தமிழ்த் தேசியத்துக்கு திராவிடம் எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்” - சீமான்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால், திராவிடம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள சீமான் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெறும் பெரியாரை போற்றுவோம் நிகழ்வில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “என் இன மக்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் கொன்று குவித்தது இந்த நாட்டு ராணுவம். அதை அனுப்பியது ராஜீவ் காந்தி. என் இனத்தையே அழித்தவர்களுக்கு அந்த அளவுக்கு நாம் இடம் கொடுத்து விட்டோம்.

அவர்களுடன் கூட்டணி வைத்து எந்த தமிழ் மக்களை கொன்று குவித்தார்களோ, அவர்களின் வாக்கை வாங்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொடுத்ததால், இன்று எங்கள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்கின்றார்கள். தன்மானமிக்க தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவெடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் அவர்களுடன் மாறிமாறி கூட்டணி வைத்ததால்தான் காங்கிரஸ் கட்சியினர் இதுபோல் பேசுகிறார்கள்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால் திராவிடம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். திராவிடம் தமிழை எங்கே காக்கிறது? தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.

இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் பெரியார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான். திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசுகிறார்.

அறநிலையத்துறை அமைச்சர் அறத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறார். பொங்கலுக்கு இலவச பரிசு பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். மதுவுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை.

எல்லாத் துறையை சேர்ந்தவர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையிலும், நாங்கள் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம் என ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடுவதற்கு காரணம் அவர்களேதான். அவர்கள் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்த அரசு அமையாமல் தடுத்திருக்க முடியும்.

போதைப் பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. தெருவுக்குத் தெரு சாராயக்கடையை திறந்து வைத்துவிட்டு விற்பனையை அதிகப்படுத்தும் நீங்கள் போதைப் பொருளை தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை ஆதரவில்லாமல் போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது.

மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் எனக் கூறுவது, மக்களுக்கு என்ன பிரச்சினை என தெரியாமலே ஆட்சி செய்கிறீர்களா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த மண்ணில் நிலவுகிற திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும்; ஆனால் ஆட்சி முறை மாறாது.

காங்கிரஸ் - பாஜக, திமுக -அதிமுகவிற்கு எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது. திமுகவிற்கு மாற்று அதிமுக என கூறுவது வெறும் வார்த்தையில் தான்; கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் உள்ளிட்டவற்றில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருவரும் கூட்டு களவாணிகள். தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில்தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது.

ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தீயசக்திக்கு மாற்று தூயசக்தி, தூய ஆற்றல் தான். எங்களைப்போல தொடர்ச்சியாக மாறுதலுக்காக போராடும் பிள்ளைகள் தான் இவர்களுக்கு மாற்றாக இருக்க முடியும்.

கோட்பாடு அளவில் நீங்கள் திராவிடர்; திராவிடம், நாங்கள் தமிழர்கள்; தமிழ் தேசியம். தத்துவ மாற்று தான். நீங்கள் லஞ்சம், ஊழல் என்கிறீர்கள். நாங்கள் உண்மை, நேர்மை என்கிறோம். இதுதான் மாற்றமாக இருக்க முடியும்” என்று சீமான் கூறினார்.

SCROLL FOR NEXT