தமிழகம்

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட போலி கடிதம் குறித்த விசாரணை - பாஜக வழக்கறிஞர்கள் நேரில் ஆஜர்

மோகன் கணபதி

சென்னை: தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையில் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 8ம் தேதி அன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரில் ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 12 சதவீதமாக இருந்த தமிழக பாஜகவின் வாக்கு வங்கி 3 சதவீதமாகக் குறைந்ததற்கு நாங்கள்தான் காரணம் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறோம்.

இதற்கு மேல் இங்கு இருந்து மானங்கெட விரும்பவில்லை என்பதால், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்கிறோம். இது எங்கள் தனிப்பட்ட நலனுக்காக எடுத்த முடிவு அல்ல. கட்சியின் எதிர்கால நலனுக்காக எடுத்த முடிவாகும். இப்படிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போலி கடிதத்தை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் குமரகுரு தமிழக அரசின் இணையக் குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சென்னை வேப்பேரியில் உள்ள இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. இதில், தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT