சென்னை: சென்னையில் உள்ள அரசு போட்டித் தேர்வு மையங்களில் இலவச பயிற்சியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் ஆகிய தேர்வு வாரியங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தமிழகத் தேர்வர்களுக்கு சென்னையில் உள்ள அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராஜர் கல்லூரி மையத்தில் 500 பேர், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி மையத்தில் 300 பேர் பயிற்சி பெறலாம்.
இதற்கான வகுப்புகள் வார வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சிக் காலம் 6 மாதங்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். எஸ்எஸ்எல்சி மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். உணவு, தங்கும் வசதியை விண்ணப்பதாரர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
இப்பயிற்சியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 26-ம் தேதி (நேற்று) தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.16-ம் தேதி. கூடுதல் விவரங்களை www.cecc.in என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.