புது டெல்லி: ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு இந்தியா இன்று (மார்ச் 5) இரங்கல் தெரிவித்தது. இந்திய அரசின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்துக்குச் சென்று, உச்ச தலைவர் அயத்துல்லா சையத் அலி காமேனியின் மறைவுக்கு, மக்கள் மற்றும் இந்திய அரசின் சார்பாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில், இந்தியாவுக்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாலியுடன் வெளியுறவுச் செயலாளர் உரையாடும் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்திப்பின்போது ஈரான் தூதரிடம் இந்தியாவின் இரங்கல் செய்தியையும் மிஸ்ரி தெரிவித்தார்
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலில், காமெனி மற்றும் அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள், அவரது பேத்தி உட்பட, அவரது உயர்மட்ட ஆலோசகர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நெருக்கடியை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்க்க இந்தியா அழைப்பு விடுத்த போதிலும், காமெனியின் படுகொலைக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிப்ரவரி 28 அன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சியுடன் பேசினார். இருப்பினும், இந்தியா சார்பாக காமேனியின் படுகொலைக்கு இரங்கல் செய்தி அல்லது தாக்குதல்களைக் கண்டிக்கும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
காமேனியின் கொலை குறித்து மத்திய அரசு மவுனம் காத்ததற்காக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், மிஸ்ரி இன்று ஈரானிய தூதரகத்துக்குச் சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் பேசினார்.