சென்னை: சென்னையில் தனியார் மென்பொருள், முதலீட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான 5 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் 'சிபிஆர்இ' என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று காலை முதல் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
ரியல் எஸ்டேட், முதலீடு மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனத்தில், வருமான வரி அதிகாரிகள் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். இதேபோல், பெருங்குடி குளோபல் இன்போசிட்டி பார்க்கில் உள்ள சில மென்பொருள் நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஓஎம்ஆர் சாலையில் இயங்கி வரும் 'டேக் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற வெளிநாட்டு நிறுவனத்திலும் வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விளம்பரம், வெளியீடு, சந்தைப்படுத்தல் துறையில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், நிறுவனங்களின் நிதி பரிமாற்றங்கள் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.