சென்னை: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக பகுதிகளில் இருந்து லட்சத்தீவு வரை சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல, உத்தர பிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா வழியாக தெற்கு கடலோர ஆந்திரா வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும். நாளை முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக் கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும். நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் மேலாலத்தூரில் 4 செ.மீ., விருதுநகர், புதுக்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.