பழனிசாமியை சந்தித்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர். அருகே கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமான ஏழு தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் கொடுத்துள்ளதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லத்தில், அவரை இந்திய ஜனநாயகக்கட்சி (ஐஜேகே) நிறுவனர் பாரிவேந்தர், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஜேகே சார்பில் போட்டியிட விரும்பும் ஏழு தொகுதிகளின் பட்டியலை பழனிசாமியிடம் வழங்கினர்.
பின்னர் நிருபர்களிடம் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது: நாங்கள் வருங்கால தமிழக முதல்வர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இதுதவிர, தேர்தல் நெருங்குவதால், எங்களுக்கு சில தொகுதிகள் வேண்டும் என 7 தொகுதிகளை குறிப்பிட்டு பட்டியலை கொடுத்துள்ளோம். அதை பரிசீலித்து, அதுபோல பாஜகவுடன் கலந்துபேசி, என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, அதிமுக ஆட்சி மாநிலத்தில் அமைய வேண்டும். யாருக்கும் எந்த விவாதமும் வரக்கூடாது. யாருக்கு எங்கு பலம் இருக்கிறதோ அங்கு தொகுதிகளை கேட்டு பெறமுடிவு எடுத்து பேசி வருகிறோம். அவர்களும் கலந்து பேசுவார்கள். நாங்கள் தனி சின்னத்தில் நிற்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.