தமிழகம்

ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்: கணவன், மனைவி உயிரிழப்பு

வி.சீனிவாசன்

சேலம்: ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கியதில், அதில் பயணம் செய்த தம்பதியினர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் சேலம், சின்னத்திருப்பதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம், ராதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் மகன் அமெரிக்காவிலும், மகள் கோவையிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கணவன் மனைவி மட்டும் சேலம் சின்னத்திருப்பதி இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.

நேற்று இரவு முதல் ஓமலூர் வட்டாரத்தில் கனத்த மழை பெய்தது. இந்த மழைநீர் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி, ஏனாதி கிராமத்தில் வழியாக செல்லும் ரயில்வே சுரங்கபாதையில் ஆறு போல தேங்கியது. இந்த நிலையில், இன்று ஓமலூர் சின்னதிருப்பதியில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்காக வெங்கடாசலமும், அவரது மனைவி ராதாவும், அதிகாலை 5 மணியளவில் காரில் வந்துள்ளனர்.

அப்போது செம்மாண்டபட்டி ஏனாதி ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரில் காரை விட்டுள்ளார். கார் லாக் ஆகி இருந்ததால், குளம்போல தேங்கியுள்ள நீரில் மழைநீரில் கார் முழுமையாக மூழ்கியது. வயதானவர்கள் என்பதால் உடனடியாக அவர்களால் வெளியே வர முடியாமல் காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து ஓமலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீரில் மூழ்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கானவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT