சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் செப்.15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு 1,28,499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் (TNMSC) கடந்த ஜூலை 14-ம் தேதி இத்திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டது. இதில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
தங்கம் விலையைத் தவிர்த்து, ஒரு மோதிரத்துக்கான செய்கூலி, சேதாரம், காப்பீடு, பேக்கிங் மற்றும் பிஐஎஸ் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனங்கள் விலையாக குறிப்பிட வேண்டும் என்பது டெண்டர் நிபந்தனை ஆகும்.
அதன்படி வெறும் ஒரு பைசா என்ற மிகக் குறைந்த விலைப்புள்ளியில் தங்க மோதிரம் செய்து தருவதாக குறிப்பிட்ட ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதம், அதே விலைக்கு செய்துதர சம்மதித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதம் என மோதிரங்கள் தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தை சூழலில் வெறும் ஒரு பைசா செலவில் தங்க மோதிரத்தை வடிவமைத்துக் கொடுப்பது சாத்தியமா? சாதாரணமாக ஒரு கிராம் தங்கம் வாங்கும்போதே செய்கூலி, சேதாரம் என கணிசமான தொகை வசூலிப்பார்கள். அரசு விதிமுறையின்படி, ஒரு மோதிரத்துக்கு பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைக்கு மட்டுமே குறைந்தபட்சம் ரூ.45 செலவாகும். அதுதவிர, பேக்கிங், போக்குவரத்து செலவு, காப்பீடு போன்ற செலவுகளையும் வெறும் ஒரு பைசாவில் எப்படி ஈடுகட்ட முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வியாபார தந்திரம்: அதேநேரம், ‘நகை நிறுவனங்கள் தங்களுக்கான பல கோடி நஷ்டத்தை ஏற்பதன் பின்னணியில் ‘பிராண்ட் புரமோஷன்’ திட்டம் உள்ளது. சுமார் 4.40 லட்சம் குடும்பங்களுக்கு தங்களது மோதிரம் சென்றடைவது பெரிய விளம்பரத்தை அந்த நிறுவனங்களுக்கு வழங்கும். அரசின் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதால் நிறுவனத்தின் நற்பெயரும் உயரும்’ என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, “பொதுவாக ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, சேதாரம் ரூ.1,050 வரை வரும். ஆனால், இதை ஒரு பைசாவில் செய்து தருவது 100 சதவீதம் சாத்தியமே. அரசின் திட்டத்துக்கு தங்களால் முடிந்த ஒரு உதவியை இந்த நிறுவனங்கள் செய்வதாக கருதலாம்” என்றார்.
இதற்கிடையே, டெண்டர்கள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை கடந்த 2020-ல் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள விலை வழக்கத்துக்கு மாறாக மிகக் குறைவாக இருந்து, அதனால் பணியை தரமாக செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விரிவான விலைப் பகுப்பாய்வு மற்றும் எழுத்துப்பூர்வ விளக்கத்தைக் கோர அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது. தகுதி இல்லையெனில் நிராகரிக்கவும் முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டப் போகின்றன என்பதற்கான தெளிவான விளக்கத்தை சுகாதாரத் துறை பெற வேண்டும். அதேநேரம், நஷ்டத்தை ஈடுகட்ட தங்கத்தின் தரம் அல்லது எடையில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மோதிரங்களின் தரம் மற்றும் எடையை கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோல, வெளிப்படைத் தன்மையே இத்திட்டத்தை முழுமையாக வெற்றி பெறச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.