நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற குதிரை சாகச நிகழ்வுக்கு முன்னதாக குதிரையுடன் அணிவகுப்பில் பங்கேற்ற ராணுவ பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள்.
குன்னூர்: குன்னூரில் நடைபெற்ற குதிரையேற்ற நிகழ்வில், பெண் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகளின் சாகசம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சாகச நிகழ்ச்சி குன்னூரில் நேற்று நடைபெற்றது.
ராணுவ பெண் அதிகாரிகள், வீராங்கனைகள் இந்த சாகச நிகழ்வில் கலந்து கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்று, குதிரையுடன் உயரம் தாண்டுதல், குதிரை ஓட்டப் பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டியும் நடைபெற்றது. இதில் நெப்போலியன், ஜான்சி ராணி மற்றும் கவ்பாய் உட்பட பல்வேறு மாறு வேட உடைகள் அணிந்தும் போனி குதிரையில் அமர்ந்தும் குழந்தைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வும் பார்வையாளர்களை கவர்ந்தது.நிறைவாக வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி அதிகாரியின் மனைவி உமா தேவி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இதில் ஏராளமானோர் பஙகேற்றனர்.