மதுரை: விவாகரத்து பெற்ற பெண் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி குறிப்பிட்ட காலத்துக்குள் மறுதிருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த நபருக்கு, ராம நாதபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் 2001-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மனைவி தனியார் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியராக உள்ளார்.
இந்நிலையில், மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் உதவி பேராசிரியர் 2015-ல் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் விவாகரத்து மற்றும் கணவரிடம் பராமரிப்புச் செலவு கோரி, திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2021-ல் விவகாரத்து வழங்கப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி கணவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சுய மரியாதையான எந்த பெண்ணும் தனது கற்பை அல்லது நடத்தையை சந்தேகப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
கணவர் தனது மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகம், மனக் கொடுமையின் கீழ் வரும். மனைவியுடன் சேர்த்து வாழ எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததும், பெற்ற குழந்தைகளுக்கு பராமரிப்புத் தொகை வழங்காமல் அலட்சியம் காட்டியதும் கணவரின் திட்டமிட்ட புறக்கணிப்பே ஆகும்.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 15-ல் விவாகரத்து பெற்ற ஒருவர், விவாகரத்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உரிமை இல்லாவிட்டாலோ அல்லது அவ்வாறு மேல்முறையீடு செய்ய உரிமை இருந்தும் மேல்முறையீடு செய்யப்படாமல் அதற்கான காலக்கெடு முடிந்திருந்தாலோ, அல்லது மேல்முறையீடு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டாலோ இரு தரப்பினரில் யாராவது ஒருவர் மீண்டும் திருமணம் செய்வது சட்டப்பூர்வமானது எனக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், முதல் நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஓராண்டு காத்திருக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொள்ளும் திருமணம் சட்டப்பூர்வமானதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேல்முறை யீடு உரிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இடைக் காலத் தடை பெறப்படவில்லை. இதனால் விவாகரத்து உத்தரவு முழுமையாக அமலில் இருந்தது.
இதனால் அப்பெண் சட்ட ரீதியாக மறுமணம் செய்துகொள்ளும் உரிமை பெற்றிருந்தார். அதன்படி, அவர் 27.8.2021-ல் மறுமணம் செய்துள்ளார்.
தற்போது மாறிவரும் சமூக நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 15-ல் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மேல்முறையீடு குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டால் மட்டும் போதாது; மேல்முறையீட்டாளர் இரண்டு மாதங்களுக்குள் விவாகரத்து தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவையும் பெற வேண்டும்.
மேல்முறையீட்டை தொடர்ந்து நடத்துவதில் கணவர் தீவிரமாக இல்லை. விசாரணையில் அவர் ஆஜராகவும் இல்லை. உரிய நடவடிக்கையின்மை காரணமாக மனு தள்ளுபடி செய்யப்படுவதை அவர் அனுமதித்தார். பெண் மறுமணம் செய்து கொண்டதைக் கவனிக்காமலேயே, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளும் உரிமை ஒரு மனித உரிமையாகும். நிச்சயமாக, இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும், பெண் மறுமணம் செய்துகொண்ட நிலையில் மேல்முறையீட்டை விசாரிப்பது பயனற்றது.
இங்கு பெண் எப்போது மறுமணம் செய்து கொண்டார் என்பது பொருத்தமற்றது ஆகும். எனவே மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.