கோப்புப் படம்

 
தமிழகம்

உடலை வாங்காமல் அரசியல் செய்வதா? - ஆகாஷ் மரண வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டம்

கி.மகாராஜன்

மதுரை: “மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உடலை வாங்காமல் அரசியல் செய்வதா?” என உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷின் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை இடமாறுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இது மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதித்துறை நடுவர் 196 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றுள்ளார். விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது. அரசே தாமாக முன்வந்தே சிபிசிஐடிக்கு மாற்றியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து தனி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

          

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இறந்த இளைஞர் குடும்படுத்தினர் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், இதுவரை உடலைப் பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘இதுவரை காவல் துறையினர் கைது செய்யப்படவில்லை என்பதாலேயே குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், ‘7 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுநல வழக்கு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். இது தொடர்பான புகார் மனு 22-ஆம் தேதி மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. 23-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘அவசரம் கருதியே விரைவாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘என்ன அவசரம்? உடலை பெற வேண்டாம் என தடுத்தது யார்? அதற்கு பொறுப்பு நீங்கள் தானே? நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து, உடல் அழுகிவிட வேண்டும் என விரும்புகிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், “இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும், உடலை பெறாமல் இருப்பது ஏன்? உடலை பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இந்த வழக்கு வேறு காரணத்துக்காக தாக்கல் செய்துள்ளது போல் தெரிகிறது. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது ஃபேஷனாகி விட்டது. உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை. அதனை குடும்பத்தினர் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT