தமிழகம்

கடைகளுக்கு நவ.1-க்குள் தமிழில் பெயர் பலகை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT