மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயில் நிதி முறைகேடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அறநிலையத்துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் கே. ராகவேந்தர் கார்த்திக் என்பவர், இந்த குத்தகையை பதிவு செய்து கொடுக்க சைதாப்பேட்டை சார் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அந்த குத்தகை பத்திரத்தை பதிவு செய்து கொடுக்க சார் பதிவாளருக்கு கடந்தாண்டு ஜூனில் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதில் குத்தகை காலம் குறிப்பிடப்படவில்லை என்றும், சந்தை மதிப்பை விட குறைவாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாக்டர் கே.ஜே.ரேணுகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பதில் பல்வேறு நிதி முறைகேடுகளும், நிர்வாக குளறுபடிகளும் இருப்பதாக அறநிலையத்துறைக்கு புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
தனி நீதிபதியின் உத்தரவு ரத்து: அதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த கோயில் பொது கோயிலா, இல்லையா என்பதை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
அத்துடன் இந்த கோயில் நிர்வாகம் குறித்து மனுதாரர் தரப்பில் கூறப்படும் நிதிமுறைகேடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கோயிலுக்கு சொந்தமான எந்த சொத்துக்களையும் குத்தகைக்கு விடக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.