சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறாத சாலைப் பணிகளுக்கு முன்கூட்டியே தொகையை விடுவித்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்பு ஜூலை 15-ம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, தவெக அரசு அமைந்த பிறகு, திமுக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது நடந்த வாதம்: எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன், “ஊழல் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அரசின் முன்அனுமதி பெறாமல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த புகாரின்பேரில் தற்போது ஆட்சி மாறிய பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் என்பதால், ஆளுநரிடம் முறைப்படி அனுமதி பெற்றே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். சாலைகள் அமைப்பதற்கு முன்பு தொகையை விடுவித்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. 76 வயதாகும் எ.வ.வேலுவுக்கு இதயநோய் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை அவரை கைது செய்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
மருத்துவக் காரணங்களுக்காக அவர் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். ஜூலை 12-ம் தேதி அவர் நாடு திரும்ப உள்ளார்” என்றனர்.
*லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “சாலைகள் அமைக்கப்படாமலேயே சாலை அமைத்ததுபோல, தகுதிச் சான்றுகள் இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பந்ததாரருக்கு 85 பணிகளுக்கு
இதுபோல அரசின் பணம் ரூ.195 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. தவிர, இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று, ஊழல் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் எதுவும் கூறப்படவில்லை” என்றார்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதி, “இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜூலை 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை மனுதாரருக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் எ.வ.வேலு ஜூலை 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று நிபந்தனை விதித்து, லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.