சென்னை: அதிமுக கொறடா உத்தரவை மீறியதற்காக கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரியபிறகு 21 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தார்.
இந்நிலையில் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், எஞ்சிய 21 அதிமுக எம்எல்ஏ-க்களும் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துள்ளதால் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரும் மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவருக்கு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
அதையேற்று பேரவைத் தலைவர் 21 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பேரவைத் தலைவரின் இந்த கைவிடுதல் உத்தரவு சட்ட விரோதமானது என்றும், அதை ரத்து செய்யக்கோரியும் வழக்கறிஞர் பி.வி.செல்வக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், `கட்சி மாறி வாக்களித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. கொறடா உத்தரவை மீறி கட்சிக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏ-க்கள் தாமாகவே தங்களது பதவியை துறந்து விடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மன்னிப்பு கோரிவிட்டார்கள்.
நாங்களும் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்கிற ரீதியில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதைத்தான் அரசியல் சாசன கேலிக்கூத்து என்கிறோம்' என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், `இது ஒரு கட்சியின் எம்எல்ஏ-க்களுக்கும், அந்த கட்சிக்கும் இடையிலான பிரச்னை. கொறடா உத்தரவை மீறி செயல்பட்டவர்களை பொதுச்செயலாளர் மன்னித்து விட்டதால் அவர்கள் மீண்டும் அந்த கட்சியி்ன் உறுப்பினர்களாகவே செயல்படுகின்றனர். இதுதொடர்பாக மூன்றாவது நபர் யாரும் பொதுநல வழக்கு தொடர முடியாது' என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ``கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை அக்கட்சியின் தலைமை மன்னித்து விட்டதால், அவர்கள் அந்த கட்சியின் உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அதிமுக எம்எல்ஏ-க்கள் 21 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சட்டப்படி 15 நாட்களில் அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது. அதை பேரவைத் தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது?
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சி எந்த வழக்கும் தொடரவில்லை. கட்சிக்கு சம்பந்தமி்ல்லாத மூன்றாவது நபர் இந்த வழக்கைத்தொடர எந்த முகாந்திரமும் இல்லை'' என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.