சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கி.மீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
மரத்வாடா முதல், கடலோர கர்நாடகா, வட உள் கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 10) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 11, 12-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13-ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 14, 15-ம்
தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,
மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 12-ம் தேதியும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 13-ம் தேதியும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறையக்கூடும்.
நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 17 செ.மீ, நாலுமுக்கில் 16 செ.மீ, காக்காச்சியில் 14 செ.மீ, மாஞ்சோலையில் 11 செ.மீ, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 9 செ.மீ, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 9 செ.மீ, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.