

சென்னை: தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 23 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 23 மாவட்ட நீதிபதிகளின் குற்றப் பின்புலம் முறையாக ஆராயப்படவில்லை, தேர்வாகியுள்ள பலர் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொள்ளவி்ல்லை. தேர்வில் இன சுழற்சி மற்றும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. தரவரிசைப்பட்டியலில் குளறுபடிகள் உள்ளதால் தகுதியற்ற பலர் தேர்வாகி உள்ளனர். 23 பேரின் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து மீண்டும் திருத்திய தேர்வுப்பட்டியலை வெளியிட வேண்டும், எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013, 2014 காலகட்டத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டன.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்முனேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நீதிபதிகளாக தேர்வாகி 12 ஆண்டுகளாக அமர்வு நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 23 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொதுவாக உள்ளன. 23 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக மூத்த நீதிபதிகள் கொண்ட தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு நியமனம் முறையாக நடந்துள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைமுறைகள் விதிமுறைகளின்படியே நடந்துள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகளின் தேர்வு நடைமுறையில் தலையிட முடியாது. எனவே, 2013-ம் ஆண்டு தேர்வான 23 மாவட்ட நீதிபதிகளின் நியமனம் செல்லும் என்பதால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.