தமிழகம்

சொத்து முடக்க நடவடிக்கைக்கு எதிராக லாட்டரி மார்ட்டின் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில், விதிகளை மீறி சிக்கிம் மாநில லாட்டரி விற்றதன் மூலம் 910 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கிம் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கேரளா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து, மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சொத்துக்களை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

SCROLL FOR NEXT