மதுரை: பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து தனிநபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு ஆகஸ்ட் 3 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி அடிவாரத்தில் ஆண்டன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த இடம் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரர் என்பவரால் பழநி தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளை பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது.
இந்த இடத்தை விற்க சிலர் முயன்ற நிலையில், மடத்தின் தக்காராக பழநி கோயில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டார். பின்னர் இடத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தி பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்தும் இடமாக மாற்றியது. இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த இடம் ரூ.2 கோடிக்கு தனிநபர்கள் இருவரின் பெயருக்கு ஜூலை 6-ல் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை பதிவு செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளத்துரை, சேதுபதி உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட பதிவாளர் சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் தாக்கல் செய் மேல்முறையீட்டை மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து சம்பந்தப்பட்ட சொத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும், பத்திரப் பதிவையும் ரத்து செய்து உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இதனிடையே, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அவரை இன்று வரை கைது செய்ய நீதிபதி ஏற்கெனவே தடை விதித்திருந்த நிலையில், இன்று முன்ஜாமீன் மனு நீதிபதி ராஜசேகர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், ‘கோயில் நிலத்தை சார் பதிவாளர் பாலசுந்தர் தான் பதிவு செய்துள்ளார். மனுதாரர் அந்த பத்திரத்துக்கு ஆவண எண் மட்டுமே வழங்கியுள்ளார். ஆனால் மனுதாரர் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆகஸ்ட் 3 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.