மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆலங்குடியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 10,000 லிட்டர் அளவுகொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதில் மனித மலம் கலக்கப்பட்டது.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த தண்ணீரை குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தியது. எனினும் தவறு செய்தவர்களை கண்டறிய முடியவில்லை. எனவே, குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, சி.வி.கார்த்திகேயன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், சிபிசிஐடி விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் தலைமை நீதிபதி, வேங்கைவயல் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.