

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: 272 எம்பிக்களுக்கு மேல் ஆதரவு இருக்கும் தகுதியுள்ள கட்சித் தலைவரே பிரதமராக முடியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை உள்ளது. அதை ஈடுகட்ட யுபிஐக்கு கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். முதலில் 0.4 சதவீதம் என்பர். பின்னர் அப்படியே உயர்த்திக்கொண்டே சென்று அனைத்துக்கும் வரி விதிப்பர்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது உள்ளிட்ட எந்தவொரு திட்டமாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது. பரந்தூரில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. கையகப்படுத்திய நிலத்தை பொதுப் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்த முடியும்.
நாட்டிலேயே மோசமான விமான நிலையமாக சென்னை உள்ளது. அதனால் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைப்பதில் 15 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலையை பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளிலாவது வந்துவிடுமா என்பதில் சந்தேகமாக உள்ளது.
மக்களவையில் 272 எம்பிக்களுக்கு மேல் ஆதரவு இருக்கும் தகுதியுள்ள கட்சித் தலைவரே பிரதமராக முடியும். தேர்தல் முடிந்த பிறகு எந்தக் கட்சிக்கு எத்தகைய பலம் உள்ளது என்பது தெரிந்துவிடும். பெரும்பான்மை அல்லது கூட்டணி அமைக்கும் திறன் உள்ள தலைவர் பிரதமராகலாம்.
அனைத்துக் கட்சியினரும் தங்களது தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் இந்த நடைமுறை அதிகமாக உள்ளது. திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை சுற்றி ஒரு வகை ஹீரோயிச கலாசாரம் இருப்பது அரசியல் யதார்த்தம்தான்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மனவருத்தம், கருத்து வேறுபாடு இருந்தால் ஆளும் கட்சியினர் தான் பேசி சரி செய்ய வேண்டும். அமெரிக்காவுடன் இதுவரை இந்தியா எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை. அமெரிக்க மிரட்டுகிறது; நம் ஆட்சியாளர்கள் அடிபணிகின்றனர்” என்று அவர் கூறினார்.