திருவண்ணாமலை: தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் 66 வது இடத்தில் இருப்பது திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டப்பேரவை தொகுதி. போளூர் தொகுதி 218 கிராமங்களும், போளூர், சேத்துப்பட்டு, களம்பூர் ஆகிய 3 பேரூ ராட்சிகளையும், போளூர், சேத்துப்பட்டு ஆகிய 2 வட்டாட்சியர் அலுவலகங் களையும் கொண்டுள்ளது.
போளூர் பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தபடியாக இருந்து வருகின்றனர்.
இந்த தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருவது விவசாயம் தான். அதேபோல், கற் சிற்பக் கலைக்கு, போளூர் தொகுதியில் உள்ள முடையூர் கிராமம் கைவினைச் சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது.
இங்குத் தயாரிக்கப்படும் பல்வேறு தெய்வச் சிலைகள் இப்பகுதி மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை.
இங்குத் தனியாருக்குச் சொந்த மான தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆலையும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், நெல் கொள்முதலில் தமிழகத்தில் 2-வது இடத்திலும், மாவட் டத்தில் முதல் இடத்திலும் உள்ளது.
இந்த தொகுதி இதுவரை 16 சட்டப் பேரவை தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில் 7 முறை திமுக, 5 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், ஒரு முறை பொது நலக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சரவணன், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் பாமக வேட்பாளர் பாஸ்கரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இந்த தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் தவெக வேட்பாளர் அபிஷேக், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமாதேவி மற்றும் சுயேட்சைகள் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி தேமுதிக வேட்பாளருக்காக, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் வாக்கு சேகரிப்பில் , கடந்த 5 ஆண்டுக் காலத்தில் போளூர் நகராட்சியாகத் தரம் உயர்த்தியது, போளூர் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது என பல்வேறு திட்டப் பணிகளைத் தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக கூட்டணிக் கட்சியாக பாமக வேட்பாளர் பாஸ்கரன், வன்னியர் களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தடுத்தது திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட திமுகவிற்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல், தவெக, நாம் தமிழர் கட்சியினர் தங்களின் தேர்தல் வாக்குறுதிகள், திமுக மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கைகள்
* போளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி அனைத்து மருத்துவ வசதி களுடன், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
* போளூர் நகராட்சியாகத் தரம் உயர்த் தப்பட்டுள்ளதால் நகராட்சி அந்தஸ் துக்கான வசதிகளை மேம்படுத்திட வேண்டும்.
* நகராட்சி அந்தஸ்துக்கான ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
* தனியார் தரணி சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை பெற்றுத்தர வேண்டும்.
* உயர்கல்வி பயில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1951 - மாணிக்கவேல் - பொது நல கட்சி
1957 - அண்ணாமலை - திமுக
1962 - கேசவன் - திமுக
1967 - குப்பம்மாள் - திமுக
1971 - சீனிவாசன் - திமுக
1977 - சுப்பிரமணியன் - அதிமுக
1980 - பலராமன் - காங்கிரஸ்
1984 - ராஜாபாபு - காங்கிரஸ்
1989 - இராசேந்திரன் - திமுக
1991 - வேதியப்பன் - அதிமுக
1996 - இராசேந்திரன் - திமுக
2001 - நளினி மனோகரன் - அதிமுக
2006 - விஜயகுமார் - காங்கிரஸ்
2011 - ஜெயசுதா - அதிமுக
2016 - சேகரன் - திமுக
2021 - அக்ரி கிருஷ்ணமூர்த்தி - அதிமுக
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,14,848
பெண் - 1,18,915
மூன்றாம் பாலினத்தவர் - 11
மொத்த வாக்காளர்கள் - 2,33,774