தமிழகம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ‘ஒஸ்தி’யாளராகும் வாய்ப்பு யாருக்கு?

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் தனித் தொகுதியாக உள்ள ஓட்டப்பிடாரத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 8 வார்டுகளும் அடங்கும். 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியானது ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியது. உப்பு உற்பத்தி, மானாவாரி விவசாயம், இதர விவசாயம் சார்ந்த தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன.

இத்தொகுதிக்கு உட்பட்ட வாகைக்குளத்தில் தூத்துக்குடி விமான நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா, மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை போன்றவை அமைந்துள்ளன. உர தொழிற்சாலை, கனநீர் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன. புதியம்புத்தூர் பகுதியில் ஆயத்த ஆடை தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 15 தேர்தல்களை கண்டுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுதந்திரா கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன. 2 முறை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. 4 முறை அதிமுக வென்றுள்ளது.

2016-ம் ஆண்டில் அதிமுகவை சேர்ந்த சுந்தர்ராஜ் வெற்றி பெற்ற நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சண்முகையா வெற்றி பெற்றார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக, 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனர். நாடார், வேளாளர், மறவர், நாயுடு சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

தீர்வு காணப்பட்டவை

ஓட்டப்பிடாரத்தில் உரிமையியல் நீதிமன்றம், கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மினி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

தொகுதியில் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும், விவசாய விளை நிலங்கள் காற்றாலைகளுக்கும், சூரிய மின் சக்தி தொழிற்சாலை அமைப்பதற்கும் தாரை வார்க்கப்படுவதும் பூதாகரமான பிரச்சினைகளாகும்.

மழைநீரை நம்பியே விவசாயம் நடைபெறுவதால், மழை இல்லாத காலங்களில் விவசாயிகளும் பிழைப்பைத் தேடி வெளியூர் செல்லும் பரிதாப நிலைஉள்ளது. இத்தொகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்திருந்தாலும், அங்குள்ள தொழில்நிறுவனங்களில் கடைநிலை பணிகளுக்கு மட்டுமே உள்ளூர் மக்கள் வேலையில் அமர்த்தப்படுவதாகவும், உயர் பொறுப்புகளில் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பேருந்து நிறுத்தம் மற்றும் தபால் அலுவலக சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்.

மேலும், மேம்பாலம் அமைத்த பின்னர் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல முடியாத நிலை தொடர்வதால், புதிய மேம்பாலத்தில் கூடுதல் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இங்குள்ள தொழில்நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

செக்காரக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு, தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். செக்காரக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். மழைக்காலத்தில், செக்காரக்குடி பெரிய ஓடையில் புதுக்கோட்டை வழியாக வீணாகிக் கடலில் கலக்கும் மழை நீரைத் தடுத்து நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அதிகப்படியானவை இடைநில்லா பேருந்துகளாக இயக்கப்படுவதாலும், தனியார் பேருந்துகள் முறையாக நின்று செல்லாததாலும் வாகைக்குளம், பொட்டலூரணி, தெய்வச்செயல்புரம், முருகன்புரம், வல்லநாடு நிறுத்தங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர்.

நீண்டகாலமாக நீடிக்கும் இந்தச் சிக்கல் தீர்க்கப்படவேண்டும். திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள செக்காரக்குடி, பொட்டலூரணி, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, வல்லநாடு, காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் கொண்டுவர வேண்டும்.

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட, கே.பி.தளவாய்புரத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், இரண்டு கோயில்களின் ஆவணங்கள் தொடர்பான வில்லங்கச்சான்றில் தனியார் நிறுவனத்தின் பெயர் வருகிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா 73,110 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி.மோகன் 64,600 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி 6,544 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் சண்முகையா 8,510 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

4 முனை போட்டி

தற்போது இத்தொகுதியில் 13 பேர் களத்தில் நிற்கும் நிலையில் திமுக, அமமுக, புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 வேட்பாளர்களிடையே போட்டி உள்ளது. திமுக வேட்பாளர் பை.மூ.ராஜஜெயத்தை கூட்டணியின் பலமான வாக்கு வங்கி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், 2026 தேர்தல் வாக்குறுதிகள், ஆகியவை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் இவர், அருகே உள்ள தொகுதியைச் சேர்ந்தவர் என்பது இவருக்கு பலவீனமாக கருதப்படுகிறது. அமமுக வேட்பாளர் ஆர்.சுந்தரராஜன் மிகவும் எளிமையாக அணுகக்கூடிய நபராக தொகுதி முழுவதும் அறியப்படுகிறார். ஏற்கெனவே 2016-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இவர், பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்ததால் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இதுகுறித்த சிறிய அனுதாபம் இப்போதும் இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்தது தனக்கு பலம் அளிக்கும் என்று அவர் நம்புகிறார். அதே நேரத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்குகள் இவருக்கு முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக உள்ளிட்ட கட்சிகளால் ஒரு சமுதாயமே முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை முன்வைத்து இவர் செய்யும் பிரச்சாரம் ஒரு சில கிராமங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கெனவே, 2 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, செய்த பணிகளை கூறியும், இந்த முறை வெற்றி பெற்றால் எத்தகைய திட்டங்கள் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தும் வாக்கு சேகரிக்கிறார். கிராமப்புறங்களில் இவருக்கு ஆதரவு அதிகம் உள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனுஷியா புதிதாக களம் கண்டாலும் மற்ற வேட்பாளர்களுக்கு இணையாக தினந்தோறும் காலை முதல் இரவு வரை மக்களை சந்தித்து சீமானின் கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

தவெக மதன்ராஜ் அவரது கட்சித் தலைவர் விஜய்யின் செல்வாக்கு மூலம் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மக்கள் யாரை ஒஸ்தியானவராக தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT