சென்னை: மூன்றாவது பிரசவத்துக்கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டுமென்றும், 12 வாரங்கள் மட்டும் விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றும் சாய்நிஷா என்பவர் தனது 3-வது பிரசவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிபதி, 3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என்ற அரசாணைப்படி ஏப்ரல் மாதத்துக்குள் பணியில் சேரும்படி சாய் நிஷாவுக்கு உத்தரவிட்டார்.
வலியும், வேதனையும் இதை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 3-வது பிரசவமும் முதல் இரு பிரசவங்களைப் போல வலியும், வேதனையும் அடங்கியதுதான்.
இதைக் கருத்தில் கொண்டே உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
எனவே மனுதாரருக்கு ஓராண்டு காலத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
3-வது பிரசவத்துக்கு 12 வாரங்களுக்கு மட்டும் விடுப்பு வழங்க வேண்டுமென்ற அரசாணை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது. அரசின் இந்த அரசாணை நீதித்துறையை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.