மதுரை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் விரைவில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர் என, உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த உமாமகேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிகளில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனம் வழியாகவும், எஞ்சிய பணியிடங்கள் நூலகத் துறையில் பணியாற்றும் முதல்நிலை நூலகர்கள் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்களைக் கொண்டு நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நேரடி நியமனத்துக்கான எண்ணிக்கையை குறைப்பது, தகுதியான இளைஞர்களின் வாய்ப்பை பறிக்கும் செயலாகும். இந்த நடைமுறையால் பதவி உயர்வு அடுக்குமுறையில் பாதிப்பு ஏற்படும். தற்காலிக பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்யும் நோக்கத்தில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நூலக அலுவலர் பணி நியமன திருத்தம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 38 மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்பும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நேரடி நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், ஒரு பணியிடத்துக்கான தகுதிகள் மற்றும் நியமன முறைகளை முடிவு செய்வது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற நவீன நூலகங்களில் அனுபவம் பெற்றவர்களை மாவட்ட நூலக அலுவலர்களாக நியமிப்பது நிர்வாக ரீதியாகச் சிறப்பானதுதான். இது தொடர்பான அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது என்றோ, தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்றோ கருத முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.