சென்னை: மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, தமிழக அரசு இடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழக அரசு இடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு, பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை 2.0-வை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு- தமிழகத்தின் முன்னுரிமை அளிக்கப்பட்ட 61 ஈரநிலங்கள்/ நீர்நிலைகள் பற்றிய ஆய்வு, தமிழக புறநகர் பகுதிகளின் அமைப்பு மற்றும் நிலையான புறநகர் மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துதல், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் பசுந்தாள் உரமிடுதல் மீதான மதிப்பீட்டாய்வு, தமிழகத்தின் வளர் இளம் பெண்களிடையே நீடிக்கும் ரத்த சோகை: செயல்பாட்டு இடைவெளிகளும் பாதிப்புகளும் ஆகிய 4 அறிக்கைகளை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் சஜ்ஜன்சிங் ரா.சவான், பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையர் ஆர்.ஜெயா, சமூக நலத்துறை செயலர் ஜெய முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.