பாமக தலைவர் அன்புமணி
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 28-ம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும், அடுத்து தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. அவரது பெயர்தான் நெல்லை பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கு கூட, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கட்டாயப்படுத்துவதும், அதை துணைவேந்தர் ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.
தமிழகத்தில் நடைபெறும் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.