செந்தில் பாலாஜி
சென்னை: பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
முன்னாள் அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியம். அந்த வகையில், செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு அமலாக்கத் துறை கடந்த மே 15-ம் தேதி கடிதம் எழுதியது. அதன்பேரில், ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியதை அடுத்து, ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: ஆளுநர் அனுமதி அளித்துள்ளதால், இந்த கோப்பு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு செல்லும். அதன்பிறகு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடும். தற்போது எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அரசாணை வெளியான பிறகு, நீதிமன்றத்தில் அந்த அனுமதி கடிதத்தை அமலாக்கத் துறை தாக்கல் செய்யும். அதன் பின்னர், நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, வழக்கின் முறையான விசாரணையைத் தொடங்கும். அமலாக்கத் துறை தனது தரப்பு சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
தற்போது ஆளுநரின் அனுமதி கிடைத்துள்ளதால் இந்த வழக்கின் முட்டுக்கட்டை நீங்கி, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை வேகமெடுத்து, இறுதிக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கும். அதேநேரம், அரசு அனுமதி அளித்ததை எதிர்த்தோ, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியோ உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்ய சட்டப்பூர்வ வாய்ப்புகளும் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.