ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ஊட்டி: மாணவர்கள் கல்வியுடன் இணைத்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-வது நிறுவனர் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய, லாரன்ஸ் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
கல்வி முறையில் சிறந்து விளங்குபவர்கள் கொண்டாடப்பட வேண்டும். அவர்களின் வெற்றி என்பது அந்த ஒட்டுமொத்த கல்வி முறையின் வெற்றியாகும்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று உள்ளது. இளம் தலைமுறையினர் கல்வியுடன் இணைத்து மனிதாபி
மானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வி முடிந்த பின் சமூகத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்யும் மனப்பான்மை அவசியம்.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்தி, வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை அளிப்பவர்களாக உருவாக வேண்டும்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவுகள் அமைக்க வேண்டியது அவசியம். புத்தாக்க சிந்தனைகளை மாணவர்கள் இளமையிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பள்ளி தலைமையாசிரியர் டி.வி.எஸ்.ராவ் வரவேற்றார். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.