தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் அரசு உறுதியளிக்க வேண்டும்: இந்து முன்னணி

மோகன் கணபதி

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற் தவெக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை அமல்படுத்துவது குறித்து புதிதாக பதவி ஏற்றுள்ள தவெக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, நூறாண்டு வழக்கமா? நீதிமன்ற தீர்ப்பா? என்று யோசிப்பதாக அரசு கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டத்தின் மாண்பை மதித்து நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தான் கடமை. நீதிமன்றம் தீர விசாரணை நடத்தும்போது தனது கருத்தை தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஆனால், தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது மக்களை குழப்புவது போல நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்வது தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிகாட்டுவதாக உள்ளது. மேலும், தவெக மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது.

தவெக அரசானது திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தான் ஆட்சியை தக்க வைத்துள்ளது. திமுகவின் இந்து விரோத, மக்கள் விரோத செயல்பாட்டை முதல்வர் ஜோசப் விஜய் தொடர நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களை மக்கள் தூக்கி எறிந்து ஜோசப் விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் இந்து விரோதமாக செயல்பட்டு மக்களின் வெறுப்பிற்கு ஆளானதுதான். அதை உணராமல் தவெக இன்னும் ஒரு திமுகவாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையை பொய்த்துப் போக வைக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில், பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வருகின்ற கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, கடந்த ஆட்சியைப் போல நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ‌ஜோசப் விஜய் அரசு கருத்து தெரிவித்து இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பின்படி கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT