தமிழகம்

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி 9 மடங்கு அதிகரிப்பு - மதுரையில் பிரதமர் பேச்சு

கி.மகாராஜன்

மதுரை: "தமிழக ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை ரூ.880 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2026 - 27 ஆண்டில் ரூ.7600 கோடியாக உயர்ந்தது" என பிரதமர் மோடி பேசினார்.

தமிழகத்தில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு நான்கு வழிச்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, பொம்மிடி, காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லித்புத்தூர் மற்றும் திருவாரூர் அம்ரித் ரயில் நிலையங்கள் திறப்பு மற்றும் சென்னை கடற்கரை- சென்னை எழும்பூர் 4வது ரயில் வழித்திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கும் விழாக்கள் மதுரை விமான நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றன.

இத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புனிதமான மதுரை மாநகருக்கு வருவதை பெரும் கவுரவமாக உணர்கிறேன். மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வருக்கும் தலை வணங்குகிறேன். இந்த விழா தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமானது. இன்று ரூ.4,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.

          

இத்திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், விவசாயிகள், சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அதிக பயனளிக்கும். இதுபோன்ற உயர்தர கட்டமைப்புகளை உருவாக்குவது மக்களுக்கு அதிகார பங்களிப்பை அளிப்பதாகும்.

கடந்த 12 ஆண்டுகளாக தமிழக நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் 2014 முதுல் 4,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மரக்காணம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம் பலமாகும். பரமக்குடி - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதி முன்னேறும். ராமேஸ்வரத்துக்கு புனித பயணம் மேற்கொள்பவர்கள், வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள், கடல்சார் பொருட்களின் போக்குவரத்தையும் மேம்படுத்தும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேத்துறை பெரும் மாற்றம் கண்டுள்ளது. ரயில் போக்குவரத்து, நவீன திறன் மிகுந்த மக்கள் சார்ந்த போக்குவரத்தாக மாறியுள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தில் நன்கு தெரிகிறது. தமிழக ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை நிதி ஒதுக்கீடு ரூ.880 கோடியாக இருந்தது. 2026- 2027 நிதியாண்டில் இது ரூ.7600 கோடியாக உயர்ந்தது.

தமிழ்நாட்டில் 1300 கிலோ மீட்டருக்கு அதிகமாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 97 சதவீத மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளன. நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமாகும். இது நமது பொறியியல் திறனின் அடையாளமாகும். இப்பாலம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரயில்கள் சேவையாற்றி வருகின்றன. இந்த ரயில்களின் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அம்ரித் திட்டத்தில் 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகாசவாணி புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2026 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில் சென்னை - பெங்களூர், சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இப்பகுதிகளின் பொருளாதாரத்தை முழுமையாக மேம்படுத்தும்.

தமிழ்நாடு வளமான வரலாறு மற்றும் மரபுக்கு சொந்தமான மாநிலம். ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உலகளவில் வரலாற்று சிறப்பு மிக்க இடமாக மாற்றப்படும். புலிகாட் ஏரி, பொதிகை மலைப்பகுதி ஆகியவற்றில் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். அதே நேரத்தில் இயற்கை வளம் பாதுகாக்கப்படும்.

நாடு முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு தயாரிப்புகள் ஊக்கப்படுத்தப்படும். இதில் தமிழ்நாட்டிலும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தமிழக இளைஞர்கள் பலனடைவர்.

2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உணர்வில் ஒவ்வொரு இந்தியரும் உள்ளனர். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றும். நம் அனைவரின் மொத்த இலக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வளர்ச்சிடைந்த தமிழகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "பிரதமர் மோடி தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று வைத்துள்ளார். இதனால் தான் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் திறந்து வருகிறார். திருக்குறளை 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். இதுவரை தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இன்று ரூ.4,500 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்" என தெரிவித்தார்.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT