இடம்: ஊட்டி | படம்: சத்யமூர்த்தி
சென்னை: தமிழகத்தில் நாளை (டிச. 19) முதல் வரும் 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 23, 24-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். இதனால் குளிர் அதிகரிக்கும். நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்தில் 14 செ.மீ., காக்காச்சியில் 12 செ.மீ., மாஞ்சோலையில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 6 செ.மீ., ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 4 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.