சென்னை மெட்ரோ ரயில் 
தமிழகம்

சென்னை மெட்ரோ ரயிலில் இனி சப்தத்துடன் வீடியோ பார்த்தால் ரூ.500 வரை அபராதம்!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, செல்போனில் அதிக சப்தத்துடன் வீடியோ பார்த்தாலோ அல்லது பாட்டு கேட்டாலோ ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் சட்டம் 2002 பிரிவு 59-ன் படி, சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

குறிப்பாக, மொபைல்போனில் உரத்த குரலில் உரையாடுதல், ஹெட்போன் இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது போன்றவை விதிமீறல்களாகும். இந்த செயல்கள் வாயிலாக அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

இச்சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, சக பயணியரின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்துக்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ‘ஸ்பீக்கர் மோட்’ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT