சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 75,064 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால், வரலாறு காணாத வகையில், 85.15 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள், விவிபாட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. பின்னர், வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டதும், பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வைத்து, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. இந்த அறைகளை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் இந்த மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சி முகவர்களும் மையங்களுக்கு வெளியே இருந்தபடி, கண்காணித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பணியில் மொத்தம் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.