மீனவர்கள் கைது

 
தமிழகம்

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (செவ்வாய்கிமை) அதிகாலை மன்னார் மாவட்ட கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கிளாஸ்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

          

பின்னர் படகிலிருந்த ஆரோக்கிய சேகர் (66), சக்திவேல் (54), அருணகிரி (54), பால்ராஜ் (55) ஆகிய 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கிராஞ்சி கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நாளை (புதன்கிழமை) அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கடைசி நாள் கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT