சென்னை: சென்னை, புறநகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு விமானங்களில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக விமானம் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
கார் பந்தயத்துக்காக பெல்ஜியம் சென்றிருந்த நடிகர் அஜித்குமார் வாக்களிப்பதற்காக நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ரயில், பஸ் டிக்கெட்
அதேநேரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு ரயில், பேருந்துகளில் செல்கின்றனர்.
டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானம் மூலம் செல்வதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
டிக்கெட் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல், தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.