தமிழகம்

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் தீ பரவல்: ஆட்டோ ஓட்டுநர் எச்சரிக்கையால் உயிர் தப்பிய பயணிகள்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 100 அடி சாலையின் மேம்பாலத்தின் இருந்து கீழ் நோக்கி இறங்கிய பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த எச்சரிக்கையால், பேருந்தில் பயணித்த 13 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் பேருந்தில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது.

புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு பேருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு, கடலூர் நோக்கி சென்றது. அந்த பேருந்து முதலியார்பேட்டை 100 அடி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தை கடந்து இறங்கிய போது பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பேருந்து ஓட்டுநரை சைகை காட்டி நிறுத்தி, "பேருந்துக்குப் பின்னால் தீ பரவுவதாக" குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து 13 பயணிகள் அலறி அடித்து வெளியே இறங்கினர்.

சில நொடிகளில் பேருந்து முழுமையாக தீப்பிடிக்க துவங்கியது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகரப் பகுதியில் இருந்து இரண்டு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இருப்பினும் பயணிகளின் அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது.

பேருந்து இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து முடித்தனர். ஆனால் பேருந்து முழுவதுமாக தீயில் எரிந்து போனது. அதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தந்த தகவலால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

SCROLL FOR NEXT