சென்னை: மாம்பழ சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மாம்பழம் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை சில எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் நிலையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது.
இயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி ரசாயனங்களை பயன்படுத்தும் கடைகளில் உள்ள பழங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
அதிகாரிகள் தீவிர ஆய்வு: தவறு செய்யும் கடைகளின் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாம்பழ மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.