‘எழுத்தாளர் பெருமாள்முருகன் அகவை-60’- ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் உரையாற்றினார். உடன், கல்லூரியின் இணை பேராசிரியர் சீ.ரகு, முதல்வர் இரா.ராமன். எழுத்தாளர் பெருமாள்முருகன், இணை பேராசிரியை பி.எழிலரசி. | படம்: எஸ்.சத்தியசீலன். |
சென்னை: எழுத்தாளர்களை தமிழ்ச்சமூகம் கவுரவிக்க வேண்டும் என்று சென்னை மாநிலக் கல்லூரி விழாவில் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் ‘எழுத்தாளர் பெருமாள்முருகன் அகவை-60-' என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில், பெருமாள்முருகனின் படைப்புகள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் 60 பெண்கள் எழுதிய 60 கட்டுரைகளின் தொகுப்பான ‘நனவிலியின் நிலம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. மாநிலக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) இரா.ராமன், இணை பேராசிரியர்கள் சீ.ரகு, ந.பழனியப்பன், முனைவர் பட்ட ஆய்வாளர் இரா.மோகனவசந்தன்.
ஆகியோரின் தொகுப்பில் உருவான இந்நூலை காலச்சுவடு கண்ணன் வெளியிட, முதல் பிரதியை தமிழ்த்துறை இணை பேராசிரியை பி.எழிலரசி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கிய அமர்வுகளில் பேராசிரியர் வில்லியம் ஜான் போஸ்கோ, எழுத்தாளர் அ.மங்கை, இணை பேராசிரியர் கோ.ரகுபதி, எழுத்தாளர் ஜனனி கண்ணன், வழக்கறிஞர் அ.அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாலையில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவுவிழாவில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தலைமை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: நான் 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் அலைந்து
கொண்டிருந்த காலகட்டம் அது. பொறியியல் படித்தவனான நான், சிவில் சர்வீஸ் தேர்வில் மானுடவியல், தமிழ் இலக்கியம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்திருந்தேன்.
அப்போது பேராசிரியர் பெருமாள்முருகனின் ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. அன்றிலிருந்தே எங்களின் இலக்கிய பயணம் தொடர ஆரம்பித்தது. தமிழகத்தில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட இருந்து கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் செம்மொழி விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
எழுத்தாளர்களை தமிழ்ச்சமூகம் கவுரப்படுத்த வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். எப்போதெல்லாம் மொழிகளுக்கு சிக்கல் வருகிறதோ அப்போது அதற்கான முன்னெடுப்புகளை செய்வது நமது வழக்கம். அந்த வகையில் தமிழ் மொழியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் சிறந்த படைப்புகள்வர வேண்டும் என்பதற்காக செம்மொழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னெடுப்பை அனைவரும் பாராட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். எழுத்தாளர் பெருமாள்முருகன் ஏற்புரையாற்றிப் பேசும்போது, “கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் அரசு கல்லூரியில் இருந்து மாநிலக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.
அப்போது எனது நாவலான 'மாதொருபாகன்' சர்ச்சையை எதிர்கொண்ட காலகட்டம். அந்தச்சூழலில் நான் மாநிலக் கல்லூரிக்கு மாறிவருவது இங்குள்ள சில பேராசிரியர்களுக்குக்கூட பிடிக்கவில்லை. சக பேராசிரியர்கள் என்னிடம் பேசவே மாட்டார்கள்.
என்னைப்பற்றி தவறான கருத்து பரப்பப்பட்டதே அதற்குக் காரணம். ஆனால், என்னிடம் பழகிய பிறகு நிலைமை மாறியது. ஒன்றரை ஆண்டில் நான் மாநிலக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது அவர்கள் கண்கலங்கினர்” என்றார்.