சென்னை: நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வுக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சில அரசியல் கட்சியினர் அது போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆகவும், கரும்புக்கு ரூ.709.50 ஆகவும் உயர்த்தி தவெக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. கரும்புக்கான ஊக்கத் தொகையாக ரூ.1,117 சேர்த்து வழங்க முன்வர வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆதார விலையுடன் நெல், கரும்புக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி தவெக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, அவற்றை படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தேர்தலின்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்தபின் அதை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகமாகும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: கடலூர் மாநாட்டில் கரும்பு விவசாய சங்க தலைவர் வலியுறுத்தியதை ஏற்று, டன் ஒன்றுக்கு ரூ.709.50 சேர்த்து அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. விவசாயக் கடன்களையும் முழு தள்ளுபடி செய்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்: நெல்லுக்கும், கரும்புக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
இதை தமிழக விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்த செயலாகக் கருதுகிறோம். இத்துடன் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியையும் தேர்தல் வாக்குறுதிப்படி அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன்: ஒரு டன் கரும்புக்கு பாஜக அரசு ரூ.3,290 மட்டுமே அறிவித்த நிலையில், தவெக அரசு ஊக்கத்தொகையாக ரூ.709.50 சேர்த்து ரூ.4 ஆயிரம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தவெக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி.
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் திறக்கவும், பழமையான ஆலைகளை புதுப்பிக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.