மதுரை உயர் நீதிமன்றம், கோப்புப் படம்.
மதுரை: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன், உயர் நீதிமன்றமதுரை அமர்வில் தாக்கல் செய்தமனு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் முதுநிலை ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்த நேரத்தில் ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அனுப்புவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் ஆளுகைக்கு உட்பட்ட மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட14 மாவட்டங்களில் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களை 2026 ஆகஸ்ட் மற்றும் 2027 பிப்ரவரி மாதங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் 2027 பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கில் 14 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர் என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 20-க்கு தள்ளிவைத்தனர்.