செங்கோட்டையன்
கோபி: “அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க இயற்கை கொடுத்த கொடையாக முதல்வர் விஜய் இருக்கிறார்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ இன்று ஜோசப் விஜய் என்று சொன்னாலே எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க இயற்கை கொடுத்த கொடையாக முதல்வர் விஜய் இருக்கிறார். இங்கு வந்துள்ள நீங்கள் தான் என்னை வாழ வைத்தீர்கள். நீங்கள் தான் 10 முறை இந்த தொகுதியில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள்.
செங்கோட்டையன் எங்கே செல்கிறார் என எல்லோரும் என்னை கேலி பேசினார்கள். நான் எம்ஜிஆரோடு பயணம் செய்தேன், அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். நான் ஜெயலலிதாவோடு பயணம் செய்தேன், அவரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இப்போது விஜய்யுடன் இணைந்தேன், இன்று ஆட்சி மாற்றப்பட்டிருக்கிறது. 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்கள்.
யாராக இருந்தாலும் இனி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர முடியும். முதல்வர் விஜய் இருக்கும் வரை ஆளும் கட்சியாக யாராலும் வர முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு உலகத் தமிழர்களின் இதயங்களில் வாழ்பவர் விஜய். இன்று நிதி நெருக்கடியில் மாநிலம் இருந்தாலும், மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் விஜய்” என்றார்.