சென்னை: டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஒருவார காலமாக, டெல்டா மாவட்டங்களிலும் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் பெருமளவு மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கிவிட்டன. கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிகளவு சென்று கொண்டிருக்கிறது.
இதனால் ஒவ்வொரு வயல்வெளியும் ஏரி போலவும், கடல் போலவும் காட்சியளிப்பது வேதனைக்குரியதாக உள்ளது. பருவமழை தொடங்கும் முன்பே வாய்க்கால்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர் வாராததே தற்போதைய நிலைக்குக் காரணம். பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்ததைப் பார்த்து விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே வானிலை நிலவரம் மற்றும் மழை பொழிவு குறித்து அறிவித்த பின்பும், வயல்வெளிகளில் தேங்கும் நீரை மடை மாற்றி வெளியே அனுப்ப எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வேளாண்மைத் துறை எடுக்காதது கடும் கண்டனத்துக்குரியது.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நெற்பயிர்களுக்கான காப்பீடு முறையாக செய்யப்பட்டதா, தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. காப்பீடு செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாகவும் பாதிப்படைந்துள்ள இதர பயிர்களுக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.