தமிழகம்

தேர்தலுக்குப் பின் சொந்த தொகுதிக்கு வந்த இபிஎஸ்: 50-க்கும் மேற்பட்ட தவெகவினர் அதிமுகவில் இணைந்தனர்

த.சக்திவேல்

மேட்டூர்: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு முதல்முறையாக எடப்பாடி தொகுதிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு சொந்த தொகுதியான எடப்பாடிக்கு தேர்தலில் வெற்றி பெற்று, 28 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று வந்தார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, உற்சாக வரவேற்பு அளித்த நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். எடப்பாடி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் பயணியர் மாளிகையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் பெற்ற வாக்குகள் குறித்தும், நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அவர் நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். பின்னர், பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நடராஜன், அவரது ஆதரவாளர்களுடன் வந்து பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT