புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் சொகுசு ரிசார்டில் தங்கவைக்கபட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க வருகை புரிந்த அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
படம்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி விடுதிக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். அவர் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு நேற்று இரவு முதல் வரத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று மதியம் புதிய விடுதி வளாகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மாறினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு 40 பேர் இங்கு தங்கிக் கொள்ளும் வகையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர் வெங்கடாசலம் உள்பட 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதுபற்றிஅதிமுக உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “தவெக ஆட்சி அமைப்பதற்கு தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. கூடுதலாக 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெகவை ஆதரிக்க விரும்புவதும் தெரிகிறது.
தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஒரு தரப்பினர் விலகி முடிவு எடுப்பதைத் தடுக்கும் வகையில் அக்கட்சி இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது” என்றனர்.
டெல்லி புறப்பட்ட சி.வி.சண்முகம்: புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த சி.வி. சண்முகம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய இன்று டெல்லி புறப்பட்டார். இப்போது மயிலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சூழலில் இன்று இரவு புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வந்தடை்தார். அவர் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கவாய்ப்புள்ளதாக அதிமுக தரப்பில் குறிப்பிடுகின்றனர்.