தமிழகம்

ஆட்சி மாற்றத்தால் மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு அதிகரிக்கும் வருவாய்

இ.ஜெகநாதன்

ஆட்சி மாற்றத்தால் மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால், எப்போதும் கிராவல் மண்ணுக்கு கடும் கிராக்கி உள்ளது. இதனால், பெரும்பாலான மண் குவாரிகளை அரசியல்வாதிகளே நடத்துகின்றனர். இதில் பல்வேறு முறை கேடுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

மேலும், முறைகேட்டை தடுக்க அரசும் 'ஆன்லைனில்' நடைச்சீட்டு வழங்குவது, ட்ரோன் மூலம் அள்ளிய மண்ணின் அளவை கணக்கிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், ஆளும் கட்சியினரின் தலையீட்டால் முறைகேடு தொடர்ந்து கொண்டே இருந்தது. இது தவிர, சட்டவிரோத குவாரிகளாலும் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே அதிகாரிகளின் கெடுபிடியால் சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டன. தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ளதால், சட்ட விரோத குவாரிகள் திறப்பதை அரசியல் வாதிகள் கைவிட்டனர். மேலும், கடந்த காலங்களில் 6 'யூனிட்' மண்ணுக்கு (30 டன்) ரூ.2,500 வரை நடைச்சீட்டுக்காக அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு ஆன்லைனில் நடைச்சீட்டு வாங்க வேண்டும்.

மேலும், மேல்மட்டத்துக்கு 'கம்பெனி என்ற பெயரில்ரூ.2,400, உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ரூ.1,200 என ரூ.3,600 வரை மறை முகமாக கப்பம் செலுத்த குவாரி உரிமையாளர்கள் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதனால், ஆன்லைனில் ஒரு நடைச்சீட்டை பெற்றுவிட்டு, அதேபோன்று போலியாக ஒன்றை தயாரித்து, மண்ணை விற்பனை செய்து வந்தனர். இதனால், ஒவ்வொரு குவாரியிலிருந்தும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு செல்வது தடைப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது, நடைச்சீட்டு முறைகேடுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குவாரிகள் முறையாக நடைச்சீட்டு பெறுவதால், அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. அதேபோல், கடந்த காலங்களில் ஒரு இடத்தில் அனுமதி பெற்று விட்டு, அதை காட்டி பல்வேறு இடங்களில் மண் அள்ளி வந்தனர். அதையும் கனிமவள அதிகா ரிகள் 'ட்ரோன்' மூலம் முறை யாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் மண் அதிகமாக அள்ளியிருந்தால் அபராதம் விதிக்கவும், அனுமதி பெற்ற இடத்தை விடுத்து வேறு இடங் களில் குவாரி இயங்கினால் மூட வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை கனிமவள துணை இயக்குநர் பன்னீர்செல்வம், 'சிவகங்கை மாவட்டத்தில் 16 குவாரிகள் அனுமதி பெற்றுள்ளன. சட்டவிரோத குவாரிகள் இல்லை. மேலும், முறையாக நடைச்சீட்டை வாங்கியுள்ளனரா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்' என்றார்.

SCROLL FOR NEXT